மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் அமைந்துள்ள பாலத்தில் 50 பயணிகளுடன் சென்ற பேருந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது. இதில், பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விழுந்தது.
இதையடுத்து இங்கு விரைந்த பொதுமக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும் இந்த விபத்தில் சிக்கி 32 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, சடலங்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதுவரை 32 உடல்களும் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.