பெங்களூரு: காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
இரு மாநிலங்களுக்கும் பொதுவான காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வதில் அண்டை மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் விசாரணை முடிவடைந்த நிலையில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 9-ந் தேதி அறிவித்தது.
இந்நிலையில் காவிரி நதி நீர் பெறுவது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்திக்க நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி, தமிழக முதல்வர் பழனிசாமி திங்களன்று கடிதம் எழுதி இருந்தார்.
இது தொடர்பாக புதனன்று பெங்களூருவில் சித்தராமையாவிடம் செய்தியார்களிடம் கேட்ட பொழுது , அவர் கூறியதாவது:
தற்பொழுது கர்நாடக மாநில பட்ஜெட் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. எனவே காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியை சந்திப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.