உத்தரகண்ட் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 47 பேர் உயிரிழந்தனர்.
உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள குயின்ஸ் பாலத்தின் அருகில் அமைந்துள்ள பிப்லி - பௌன் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்து ஏற்பட்டது. பௌனில் இருந்து ராம்நகர் நோக்கி காலை 9 மணி அளவில் சென்றுகொண்டிருந்த போது அப்பேருந்தின் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.
இந்நிலையில், அங்கிருந்த சுமார் 200 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணம் செய்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துக்கான மீட்புப்பணியில் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் சிகிச்சையை அரசே மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.