ஹைதராபாத்: குடி போதையில் தனது மூன்று வயது குழந்தையை துணி போல் தூக்கி ஆட்டோவில் வீசி அடித்த தந்தையின் செயல் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான ஜாகத்கிரி குட்டா பகுதியில் உள்ள சீனிவாசா நகரைச் சேர்ந்தவர் ஷிவா கவுட்(30). வாடகை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இவருக்கு மனைவியும், 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. மது அருந்தும் பழக்கம் உள்ள இவர் அடிக்கடி மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அதேபோல திங்களன்றும் மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஷிவா, மனைவியுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். சண்டையின் உச்சத்தில் திடீரென ஆத்திரத்தில் வீட்டு முன் விளையாடிக்கொண்டிருந்த தனது 3 வயது மகனைக் தூக்கி, பக்கத்த்தில் நின்றிருந்த ஆட்டோ மீது துணி போல விசிறி அடித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தார் ஷிவாவை பிடிக்க அனைவரும் முயன்றனர். அப்போது அவர் தனது மகனை விட்டுவிட்டு தப்பி ஓடினார். தலையில் பலத்த காயமடைந்த அந்தக் குழந்தை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது. தற்பொழுது குழந்தை நலமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவமானது அருகில் இருந்த வீட்டின் கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது.. அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து ஜாகத்கிரி குட்டா போலீஸார் விசாரித்தனர்.
ஆனால் குழந்தையின் எதிர்காலம் கருதி அந்தக் குழந்தையின் தாய் புகார் அளிக்க மறுத்துவிட்டார். இதனால், போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். ஐபிசி பிரிவு 324, சிறுகுழந்தைகள் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் ஷிவாவைத் தீவிரமாகித் தேடி வருகின்றனர்.
விடியோ: