வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கின்னஸ் அமைப்புக்கு கோவா காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, அவ்வப்போது வெளிநாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரின் இந்த பயணங்கள் எதிர்கட்சிகளால் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், கோவா மாநில காங்கிரஸ், இதில் புது விதமான எதிர்ப்பை முன்வைத்துள்ளது. அவ்வகையில், வெளிநாடு சுற்றுப்பயணங்களில் சாதனைப் படைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சாதனைப் புத்தகத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று கின்னஸ் அமைப்புக்கு கோவா காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவா மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் சங்கல்ப் அமோன்கர், செய்தியாளர்களை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உலகிலேயே வேறு எந்த பிரதமரும் செய்யாத சாதனையை இந்திய பிரதமர் மோடி செய்துள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வதில் அவர் புது சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் எதிர்கால சந்ததிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். எனவே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை பரிந்துரைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்திய பொருளாதாரத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிரதமர் மோடி, கடந்த 4 ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு 41 முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு அவர் செலவு செய்துள்ளது ரூ.355 கோடி ஆகும் என்று கின்னஸ் அமைப்புக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளோம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.03-க்கு சரிந்த போதும், எதுகுறித்தும் கவலைப்படாத பிரதமர், இந்தியாவை விட வெளிநாடுகளிலேயே அதிக நேரம் செலவிட்டுள்ளார். எனவே அவருடைய கேலிக்கூத்தான செயலை வெளிக்காட்டும் விதமாகவே இந்த கடிதத்தை எழுதியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.