பனாஜி: கோவா மாநில பொதுப் பணித் துறை அமைச்சர் சுதின் தவாலிகர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது நேற்றைய செய்தி.
சுதீன் தவாலிகருக்கு மும்பை மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தற்போது குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவா மக்களின் பிரார்த்தனையால் சுதீன் குணமடைந்து வருவதாகவும், விரைவில் அவர் பணிக்குத் திரும்புவார் என்றும் அவரது குடும்பத்தினர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளனர்.
கோவாவில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து, மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்ற பிறகு, கடந்த 6 மாதங்களில் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 7வது கோவா எம்எல்ஏவாக அமைச்சர் சுதீன் தவாலிகர் உள்ளார்.
கடந்த மாதம் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மின்சாரத் துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர், தற்போது வரை மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், மின்சாரத் துறையின் அமைச்சராக தற்காலிகமாக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்த நிலையில் கணையப் புற்றுநோய் ஏற்பட்டு கடந்த மாதம் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோகர் பாரிக்கர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று சமீபத்தில் கோவா திரும்பினார்.
கடந்த ஆறு மாதங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட கோவா எம்எல்ஏக்களின் பட்டியல் இதோ..
முதல்வர் மனோகர் பாரிக்கர், பாண்டுரங் மட்கைகர். பிரான்ஸிஸ் டிசௌஸா, கார்லோஸ் அல்மெய்டா, காங்கிரஸ் எம்எல்ஏ இஸிடோர் ஃபெர்னான்டஸ், பிரதாப் சிங் ராணே, சுதீன் தவாலிகர்.