ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் இடையூறு செய்ய நினைத்தால் மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி மத்திய அரசை எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பு படைகளினால் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக அரசின் சார்பில் விழா ஒன்று வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீநகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி கலந்து கொண்டார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசானது 1987-ஆம் ஆண்டில் செய்தது போன்று காஷ்மீர் மக்களின் வாக்குரிமையை பறிக்க எண்ணினாலோ, அல்லது இப்போது செய்வது போன்று மக்கள் ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளில் இடையூறு செய்ய நினைத்தாலோ, 87-இல் சலாஹுதீன் மற்றும் யசின் மாலிக் போன்ற பிரிவினைவாதிகள் உருவானது போல, மோசமான பின்விளைவுகள் ஏற்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.