புது தில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் குறித்து சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி, தில்லியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது மரணம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தில்லி உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு தாக்கல் செய்தார். ஆனால், அம்மனு கடந்த ஆண்டு அக்டோபர் 26-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மேல்முறையீடு செய்தார். அம்மனு, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு முதல் தடவையாக கடந்த ஜனவரி 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது நீதிபதிகள், “இந்த குற்றச்சாட்டின் தகுதி குறித்து விசாரிப்பதற்கு முன்பாக, இந்த மனுவின் முகாந்திரம் குறித்து நாங்கள் திருப்தி அடைவது அவசியம்" என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த மனுவானது வெள்ளியன்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அப்துல் நசீர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது இது ஒரு முடிந்து போன விவகாரம் என்று தெரிவித்து சுவாமியின் மனுவினை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவர் கூற விரும்பிய கருத்துக்களையும் நீதிமன்றம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.