ஆன்மிக குரு தாதா வாஸ்வானி காலமானார்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மிக குரு தாதா ஜே.பி.வாஸ்வானி (99) வியாழக்கிழமை காலமானார்.
ஆன்மிக குரு தாதா வாஸ்வானி காலமானார்

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆன்மிக குரு தாதா ஜே.பி.வாஸ்வானி (99) வியாழக்கிழமை காலமானார். சாது வாஸ்வானி மிஷன் தலைவரான அவர் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் புணேயில் உள்ள மருத்துவமனையில் சில நாள்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். பின்னர், புதன்கிழமை இரவு மருத்துவமனையில் இருந்து ஆசிரமத்துக்கு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவர் காலமானார் என்று ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் வஸ்வானியின் 100-ஆவது பிறந்த தினம் வர இருந்தது. அதனை சிறப்பாகக் கொண்டாட அவரது சீடர்கள் ஏற்பாடுகளை செய்து வந்தனர். இந்நிலையில், வாஸ்வானியின் மறைவு சீடர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இப்போதைய பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் 1918 ஆகஸ்ட் 2-இல் பிறந்த அவர், புணேயில் சாது வாஸ்வானி ஆசிரமம் மற்றும் அறக்கட்டளையைத் தொடங்கி ஆன்மிகத்துடன் பல்வேறு சமுதாயத் தொண்டாற்றி வந்தார். இந்த அறக்கட்டளையின் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் பலருக்கு வாழ்வளித்து வருகிறது. ஆன்மிகவாதியாக மட்டுமல்லாது சிறந்த கல்வியாளர், தத்துவ ஞானி, மனித நேய பண்பாளராகவும் வாஸ்வானி பெரிதும் அறியப்பட்டவர். சைவ உணவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பாகப் பணியாற்றிய அவருக்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் சீடர்கள் உள்ளனர்.
தாதா வாஸ்வானியின் மறைவுக்கு மகாராஷ்டிர ஆளுநர் சி.வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com