ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அகில இந்திய பிரசாரகர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, அதன் தலைவர் மோகன் பாகவத் குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்திற்கு வியாழக்கிழமை வந்தடைந்தார்.
இது குறித்து குஜராத் ஆர்.எஸ்.எஸ். செய்தித் தொடர்பாளர் விஜய் தாக்கேர் கூறியதாவது:
அகில இந்திய பிரசாரகர்கள் மாநாடு, ஜூலை 15 முதல் 17-ஆம் தேதி வரை சோம்நாத் நகரில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் இயக்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், நாடு முழுவதிலும் உள்ள 12 பிராந்தியங்கள் மற்றும் 39 மாகாணங்களைச் சேர்ந்த பிரசாரகர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். இம்மாநாட்டில், இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், வருங்காலப் பணிகள் குறித்தும், இயக்கத்தை மேலும் பலப்படுத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.