பி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
2018-19-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு சற்று தாமதமாகத் தொடங்கப்பட்டது. அதாவது ஜூலை 1-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி நிறைவடைந்தது. இதன் காரணமாக, பி.இ. கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க இயலாமல் போனது.
அது மட்டுமின்றி, மீதமுள்ள 20 நாள்களில் கலந்தாய்வை நடத்தி முடிக்க இயலாது என்பதால், கூடுதல் கால அவகாசம் கேட்டும், பி.இ. முதலாமாண்டு வகுப்புகளை ஆகஸ்ட் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தொடங்க அனுமதிக்கக் கோரியும் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பி.இ. கலந்தாய்வை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கக் கோரும் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.