பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா திட்டம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விஷன் 2020-ஐ மீட்டெடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டு பொது வாழ்வில் சிறந்து விளங்கிய அதிகாரிகளுக்கு அப்துல் கலாம் நினைவு விருதுகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் ஜிதேந்திர சிங், அந்த கருத்தரங்கில் பேசியதாவது:
அப்துல் கலாம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத காலகட்டமாகும். அவர் அனைத்திலும் சிறந்த முன் உதாரணமாக விளங்கியவர். கலாம் அவர்களுடைய பொது மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வித முரண்பாடுகளும் இருக்காது. அதுபோன்று அவருடைய அறிவியல் கோட்பாடுகள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் இருக்கும்.
தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் புதிய இந்தியா திட்டம், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விஷன் 2020-ஐ மீட்டெடுக்கும் முயற்சிதான். அப்துல் கலாம் தெரிவித்த விஷன் 2020 என்பது வெறும் கணக்கு அல்ல. மாறாக அந்த காலகட்டத்தில் புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளும், சிந்தனையும், எண்ணமும் தான். அதனை தான் தற்போது பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்றார்.