மும்பை: பருவ மழையால் சீரழிந்துள்ள மும்பை சாலைகளை சீரமைக்கக் கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா (எம்.என்.எஸ்) கட்சித் தொண்டர்கள், மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.
சமீபத்தில் பெய்த பருவ மழையால் மும்பையில் சாலைகள் மோசமாக சீர்கேடு அடைந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனைக் விரைந்து சீர் செய்யக் கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறாரகள்.
அதன் ஒரு பகுதியாக திங்களன்று நவி மும்பை பகுதியில் அமைத்துள்ள பொதுப் பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட அக்கட்சித் தொண்டர்கள், அங்குள்ள நாற்காலிகள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்நிலையில் மும்பை சாலைகளை சீரமைக்கக் கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சித் தொண்டர்கள், செவ்வாயன்று மந்தராலயா பகுதியில் அமைந்துள்ள மாநிலத்தின் தலைமைச் செயலக சாலையை உடைத்து போராட்டம் நடத்தினார்கள்.
இதுதொடர்பான விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் 10 எம்.என்.எஸ் தொண்டர்கள் கையில் வைத்துள்ள சுத்தியல் மற்றும் இரும்புத் தடி உள்ளிட்ட ஆயுதங்களைக்கொண்டு சாலையை அடித்து உடைக்கின்றனர்.
இதனால் மாநில அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டங்கள் தீவிரமாகும் என்று கருதப்படுகிறது.