ஹைதராபாத்: ஹைதராபாத்தில் பள்ளிச் சிறுவனை அவனது தோழனே அடித்துக் கொன்று எரித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
19 வயதாகும் பிரேம்சாகர், தனது தோழனும் பள்ளி மாணவனுமான பிரேமை (17) அடித்துக் கொன்று, அவனது உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான். இவர்கள் இருவரும் பழைய ராமநாத்புர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
மாணவன் மாயமானது குறித்து விசாரணை நடத்திய காவல்துறையினர், நேரில் பார்த்த சாட்சியங்களை அடிப்படையாக வைத்து, பிரேம்சாகரை பிடித்து விசாரித்ததில், அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த கொலைச் சம்பவம் நடந்துள்ளது. காவல்துறை விசாரணையில், நேற்றுத்தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குற்றவாளி அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து, பாதி எரிக்கப்பட்ட நிலையில் மாணவனின் உடலை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை உப்பல் பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் இருந்து பிரேமை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வந்த பிரேம்சாகர், வீட்டில் இறக்கி விட்டுள்ளான். பிறகு மீண்டும் வந்து பிரேமை வெளியே அழைத்துச் சென்றுள்ளான்.
அதன் பிறகு பிரேம் வீடு திரும்பாததால், பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். முதற்கட்ட விசாரணையில் பிரேம்சாகரின் செல்போனை வைத்து அவன் எங்கிருக்கிறான் என்று விசாரித்த காவல்துறை அவனை கைது செய்தது.
அவனிடம் நடத்திய விசாரணையில், வேலை போனதால் அதிகக் கடன் காரணமாக, தனது தோழன் பிரேம் பயன்படுத்தும் செல்போனை கொள்ளையடிக்க திட்டமிட்டே அவனைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான்.
வீட்டில் இருந்து கிரிக்கெட் விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி, ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்ற பிரேம்சாகர், இரும்புக் கம்பியால் அவன் தலையில் தாக்கிக் கொலை செய்து விட்டு அவனது செல்போனை எடுத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளான். பிரேமின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த போது எதிர்பாராதவிதமாக தனது கையிலும் தீக்காயம் ஏற்பட்டதாகவும் குற்றவாளி பிரேம்சாகர் கூறியுள்ளான்.
செல்போனை விற்று தனது கடனை எல்லாம் அடைத்துவிடலாம் என்று எண்ணி, தோழனையே கொலை செய்த இளைஞன் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.