சசி தரூர் தனது பெண் தோழியுடன் தங்குவதற்கு பாகிஸ்தான் வசதியாக இருக்கும்: சுப்ரமணியன் சுவாமி
சசி தரூர் தனது பெண் தோழியுடன் தங்குவதற்கு பாகிஸ்தான் வசதியாக இருக்கும் என்று பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி, புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர் கூறியதாவது:
என்னை பாகிஸ்தான் செல்லுமாறு பாஜக கூறி வருகிறது. அவ்வாறு கூறுவதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நானும் அவர்களைப் போன்று ஹிந்து தான். எனக்கு இங்கு தங்க உரிமை இல்லையா? பாஜக ஹிந்துத்துவத்தில் தாலிபன் பிரிவை உருவாக்கியுள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பாஜக தலைவர் சுப்ரமணியன் சுவாமி அளித்த பேட்டியில் கூறியதாவது:
சசி தரூரை பாகிஸ்தான் செல்லுமாறு நாங்கள் அறிவுரை தான் வழங்கியுள்ளோம். அதுவே இந்நேரம் தாலிபனாக இருந்திருந்தால் வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். ஏனென்றால் அவருடைய பெண் தோழி பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பைச் சார்ந்தவர். எனவே பாகிஸ்தானில் வசிப்பது அவருக்கு மேலும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
அவர் தன்னை ஹிந்து என்று கூறியுள்ளார். ஆனால் அவர் ஒருபோதும் மர்மமான முறையில் இறந்த தனது மனைவி சுனந்தா புஷ்கருக்கு ஆதரவாக எதையும் கூறியது கிடையாது. சசி தரூர் கூறி வரும் கருத்துக்கள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இதுபோன்று இந்தியாவுக்கு எதிராக மேசமாக பேசி வருவது இந்த மாதிரியான சூழலைத் தான் ஏற்படுத்தி வருகிறது என்றார்.