பிரதமர் மோடியை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கவில்லை என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கடந்த மாதம் பிரதமரைச் சந்திக்க கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழுவுக்கு பல முறை அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து, வியாழக்கிழமை பிரதமரை சந்திப்பதற்கு முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவுக்கு அனுமதி கிடைத்தது.
அதனாலேயே, கேரள பிரதிநிதிகள் குழுவை பிரதமர் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெற்றிருந்தது.
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"இந்த சந்திப்பு பலனளிக்கும் வகையில் இல்லை. உணவு தானியங்கள் வழங்குவதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். ஆனால் அதற்கு பிரதமர், எதுவும் செய்ய இயலாது என்று தெரிவித்துவிட்டார்.
பாலக்காடு ரயில் பெட்டி தொழிற்சாலை குறித்து எதிர்பார்புடன் கேரளாவில் இருந்து புதன்கிழமை கிளம்பினோம். ஆனால், மத்திய அரசுக்கு அது போன்ற எந்தவொரு திட்டமும் இல்லை.
கேரளாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் குறித்த விவகாரத்தையும் அவரிடம் எழுப்பினோம். மத்திய குழுவை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை வைத்தோம். அவர் அது நடக்கும் என்றார்.
ஹெச்என்எல் தொழிற்சாலை விற்பனை செய்யும் முடிவில் உள்ளது. அதற்கு, மத்திய அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கேரள அரசிடம் அதற்கான பொறுப்பை ஒப்படைக்க வேண்டும். மேலும் கோழிகோட்டில் விமானங்களை தரையிறக்க மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இப்படி பல விவகாரங்கள் குறித்து பிரதமர் முன்வைத்தோம்.
ஆனால், மொத்தத்தில் சாதகமான பதில்கள் ஏதும் பிரதமரிடம் இருந்து வரவில்லை" என்றார்.
இதையடுத்து, கேரள எதிர்க்கட்சி தலைவர் சென்னிதலா கூறுகையில்,
"ஹெச்என்எல் தொழிற்சாலை விற்பனை விவகாரம் குறித்து நாங்கள் பேசியதற்கு கேரள அரசும் அதனை விலைக்கு எடுக்கலாம் என்று பதில் வந்தது. இந்த சந்திப்பு ஏமாற்றம் அளிக்கிறது" என்றார்.