மக்களவையில், கும்பல் கொலைகள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறிய கருத்து திருப்தியளிக்காததை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் இந்தியாவில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் கும்பல் கொலைகள் குறித்தான விவாதம் எழுந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், கும்பல் கொலைகளை துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
"இது துரதிருஷ்டவசமான நிகழ்வுகள். இதுகுறித்தான அறிவுரை அறிக்கைகள் 2016-ஆம் ஆண்டு ஒரு முறையும் அண்மையில் ஒரு முறையும் வெளியிடப்பட்டது. தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை பரப்புதவதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதும் ஒரு காரணம். சமூக வலைதளங்களிடம் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் குறித்து கேட்டுள்ளோம்.
சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு உள்ளது" என்றார்.
இதையடுத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ் வெளிநடப்பு செய்வதற்கு முன் அக்கட்சியின் தலைவர் மல்லிகாஜூர்ன கார்கே, மத்திய உள்துறை அமைச்சரின் பதில் திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்றார்.