ஆளும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்காக கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நேரம் வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த தெலுங்கு தேசம் கட்சி, ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததைக் கண்டித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் கூட்டணியில் இருந்து வெளியேறியது. இந்தச் சூழலில்தான் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை அந்தக் கட்சி கொண்டுவந்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸை சில எதிர்க்கட்சிகள் அளித்துள்ளன; இது ஏற்கப்படுகிறது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த கே.ஸ்ரீனிவாஸ் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவார். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 20) விவாதமும், அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பும் நடைபெறும். அன்றைய தினம் முழுவதுமே நம்பிக்கையில்லாத தீர்மானம் மீதான விவாதம் மட்டுமே நடைபெறும். கேள்வி நேரம் உள்பட வேறு எந்த வழக்கமான பணிகளும் இருக்காது என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த தீர்மானம் மீதான விவாதத்துக்காக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேர விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.