பஞ்குல்லா: பஞ்சாபில் திருமணமான 22 வயது இளம்பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு நான்கு நாட்கள் நாற்பது பேரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இது குறித்து போலீஸ் வட்டாரங்களில் கூறப்படுவதாவது:
சண்டிகாரின் மோர்னி ஹில்ஸ் பகுதியில் உள்ள கைம்ப்வலா கிராமத்தில் அமைந்துள்ள தங்கும் விடுதி ஒன்றில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு தையல் தொழில் செய்து வரும் ஒருவரின் மனைவிதான் குறிப்பிட்ட அந்த இளம்பெண் (22). விடுதி உரிமையாளர் சன்னி, அந்த இளம்பெண்னின் கணவருக்கு தெரிந்தவர். விடுதியில் சுத்தம் செய்யும் வேலையை அந்தப் பெண்ணுக்கு தருவதாக கூறியதால், கடந்த 15-ஆம் தேதி விடுதிக்குச் சென்று சன்னியைச் சந்திக்க கணவர் ஏற்பாடு செய்துள்ளார்.
அதன்படி சந்திக்க வந்த பெண்ணை சன்னி குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் அவரை அங்கிருந்த அறை ஒன்றில் அடைத்து வைத்து தொடர்ந்து நான்கு நாட்கள் சன்னியின் நண்பர்கள் உள்ளிட்ட 40 பேர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அவரது அலைபேசியையும் அவர்கள் பிடுங்கி வைத்துக் கொண்டதால் அவரால் தன் கணவருக்கும் தகவல் எதுவுமளிக்க இயலவில்லை.
பின்னர் ஒருவழியாக கடந்த 18-ஆம் தேதியன்று அங்கிருந்து எப்படியோ தப்பி வந்தவர் கணவருடன் சேர்ந்து ஹரியானாவின் பஞ்குல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் அங்கு புகாரினை பெற மறுத்ததால், அவர் சண்டிகாரின் மணி மஜ்ரா காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் விசாரணை செய்த போலீசார் விடுதி உரிமையாளர் சன்னி உட்பட இருவரை கைது செய்துள்ளனர். அத்துடன் வழக்கானது மீண்டும் உரிய அறிவுறுத்தலின் படி பஞ்குல்லா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை தேடும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது.