மக்களவையில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி ஆரத்தழுவியதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கௌர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாம் திரைப்படத்தில் நடிக்கவில்லை; நாடாளுமன்றறத்தில் பேசுகிறோம் என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சா் ஹர்ஷிம்ரத் கௌர் தெரிவித்துள்ளார். மக்களவையில் அமர்ந்திருந்த பிரதமர் மோடியை ராகுல் ஆரத்தழுவியதை விமர்சிக்கும் வகையில் அவர் இத்தகைய கருத்தை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் இடம் நாடாளுமன்றம் என்றும், மாறாக, அது ஒன்றும் முன்னாபாய் (வசூல்ராஜா) திரைப்படக் காட்சியில்லை என்றும் மத்திய அமைச்சர் சாடியுள்ளார். அப்படத்தின் நாயகன் கதைப்படி பல்வேறு கதாபாத்திரங்களை அரவணைத்து ஆறுதல் கூறும் வகையில் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதை ஒப்பிட்டு ராகுல் காந்தியின் செயலை மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கௌா் விமர்சித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, தாம் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கும்போது அமைச்சர் ஹர்ஷிம்ரத் கௌர் அதை ரசித்து சிரிப்பதாகத் தெரிவித்தார். அதற்கு ஹர்ஷிம்ரத் கடும் எதிர்ப்பு தெரிவித்தாா். ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அகாலி தளத்தைச் சேர்ந்தவா் ஹர்ஷிம்ரத் கௌர் என்பது குறிப்பிடத்தக்கது.