கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸை, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் அளித்த பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நிரந்தர தலைமை நீதிபதியாக யாரும் நியமிக்கப்படவில்லை. நீதிபதி கீதா மிட்டல் என்பவரே, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக (பொறுப்பு) கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அனிருத்தா போஸை, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்திருந்தது. இந்த பரிந்துரையை மத்திய அரசு கடந்த மாதம் திருப்பி அனுப்பி விட்டது.
இந்த பரிந்துரையை திருப்பி அனுப்பியதற்கு, தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி என்பது மிகவும் முக்கியமான பதவியாகும்; எனவே, இதற்கு முன்பு எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாக பணியாற்றிய முன் அனுபவம் இல்லாத நீதிபதி அனிருத்தா போஸை, அப்பதவியில் நியமிக்க இயலாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், வேறு உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக அனிருத்தா போஸை நியமிப்பதில் மத்திய அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.