வாட்ஸ் - அப் செயலியின் மூலம் வன்முறைக்கு வித்திடும் வதந்திகளும், தவறான தகவல்களும் பரப்பப்படுவதைத் தடுக்காவிட்டால் அந்நிறுவனம் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இத்தகைய சம்பவங்களைத் தடுப்பதற்கு உரிய வழிமுறைகளைக் கண்டறியுமாறும் வாட்ஸ் - அப் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமூக வலைதளச் செயலிகளில் பிரதானமாக விளங்கும் வாட்ஸ் - அப், இந்தியாவில் பல கோடி பேரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தகவல் - தொழில்நுட்ப ரீதியில் அதில் பல்வேறு பயன்கள் இருந்தாலும், மறுபுறம் பல தவறான செய்திகள் அதன் வாயிலாக பரப்பப்படுகிறது. குழந்தை கடத்தும் கும்பல், பசு கடத்தல் கும்பல் என வதந்திகள் பரவுவதை நம்பி பல்வேறு இடங்களில் அப்பாவி மக்கள் அடித்துக் கொல்லப்படுகின்றனர்.
இத்தகைய தவறான செய்திகள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் - அப் நிறுவனத்துக்கு ஏற்கெனவே மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சார்பில் மீண்டும் ஒரு நோட்டீஸ் வியாழக்கிழமை அனுப்பப்பட்டுள்ளது. வதந்திகளும், பொய் தகவல்களும் பரவுவதைத் தடுக்காமல் அதை வெறுமனே வாட்ஸ் - அப் நிறுவனம் வேடிக்கை பார்க்குமானால், சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரும்பத்தகாத சம்பவங்களுக்கு அந்நிறுவனம் உடந்தையாக இருப்பதாக கருதி அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.