மாதவிடாய் தீட்டு என்றால் குழைந்தைப்பேறு குற்றமா? சபரிமலை பற்றி கேரள சபாநாயகரின் அதிரடி கேள்வி

10 முதல் 55 வயது பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று சபரிமலை கோயில் நிர்வாகம் கூறியிருக்கும் கருத்து குறித்து கேரள சட்டப்பேரவை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.
மாதவிடாய் தீட்டு என்றால் குழைந்தைப்பேறு குற்றமா? சபரிமலை பற்றி கேரள சபாநாயகரின் அதிரடி கேள்வி


திருவனந்தபுரம்: 10 முதல் 55 வயது பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்க முடியாது என்று சபரிமலை கோயில் நிர்வாகம் கூறியிருக்கும் கருத்து குறித்து கேரள சட்டப்பேரவை சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் தனது மௌனத்தைக் கலைத்துள்ளார்.

அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை செய்துள்ளார். அதில், மாதவிடாயை காரணமாகக் கூறி கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது எனும் வாதத்தை ஸ்ரீராமகிருஷ்ணன் சாடியுள்ளார்.

அதாவது, சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் வழிபட அனுமதிக்க முடியாது என்பது, பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வரவேற்கத்தக்கதே. ஒரு வேளை, மாதவிடாய் என்பது பெண்கள் அசுத்தமாக இருக்கும் நேரம் என்று கூறி, அவர்களை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுப்போம் என்றால், பிறகு தாய்மை என்பதை குற்றம் எனச் சொல்வீர்களா? என்று கேட்டுள்ளார்.

நாம் அனைவருமே பிறக்கும் முன்பு வரை தாயின் கருப்பையில் பத்திரமாக இருந்தோம். நமது பிறப்புக்கும், மாதவிடாய்க்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போது, அதனை எப்படி இழிவுபடுத்த முடியும்? உண்மைதான், ஒவ்வொரு கோயிலுக்கும் என தனி வழிபாட்டு முறைகள் இருக்கும் போது அதனை பின்பற்றுவதில் எந்த தவறும் இல்லை ஆனால், அது அரசியல் சாசனத்தில் கொடுக்கப்படும் உரிமைகளை பறிப்பதாக இருக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறியுள்ளார்.

வழக்கின் பின்னணி: கேரளத்தில் உள்ள சபரிமலைக் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கியது.

அப்போது தேவஸ்வம் போர்டு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் ஏ.எம்.சிங்க்வி, சபரிமலை கோயிலுக்குள் நுழைவதற்கான அடிப்படைத் தேவையான 41 நாள்கள் கடும் விரதத்தை, பெண்களால் கடைப்பிடிக்க முடியாது என்றும், இதன் காரணமாகவே, குறிப்பிட்ட வயதிலுள்ள பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை என்றும் வாதாடினார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள் கூறியதாவது: 
41 நாள்கள் கடும் விரதத்தைப் பெண்கள் கடைப்பிடிப்பது கடினம் தான். காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறையே பெண்களுக்கு எதிரான பாகுபாடாக இன்று மாறியுள்ளது. 

இந்த நடைமுறை நெடுங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறுவதைக் காட்டிலும், நெடுங்காலமாக பக்தர்கள் மீது திணிக்கப்பட்டு வருகிறது என்றே கூற வேண்டும். ஆனால், மக்களுக்கான அரசியலமைப்புச் சட்டத்தில், இத்தகைய நம்பிக்கைகளை திணிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அரசியலமைப்பில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக சட்டங்கள் இயற்றப்படவில்லை. ஆண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அனைத்து வகையான உரிமைகளும், பெண்களுக்கும் பாகுபாடுகள் ஏதுமின்றி அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெண்களின் உடலியல் சார்ந்து ஏற்படும் இயற்கை நிகழ்வான மாதவிலக்கைக் காரணம் காட்டி,கோயிலுக்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்திருந்தது.

அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கத் தயாராக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலைக்கு 10 வயதுக்கு குறைவான சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com