ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஹிஸ்புல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட காவலர், சடலமாக சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் சனிக்கிழமை கூறியதாவது:
சலீம் ஷா என்ற காவலரை, குல்காம் மாவட்டத்தின் முதல்ஹாமா பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை இரவு கடத்திச் சென்றனர். இந்நிலையில், அருகில் உள்ள ரிவாண்டி பயீன் கிராமத்தில், அவர் சனிக்கிழமை இறந்து கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருப்பதால், அவரைக் கடத்திச் சென்றவர்கள் கடுமையாகத் தாக்கியிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த சலீம் ஷா, புல்வாமாவில் பணியாற்றி வந்தார். அவருக்கு வயதான தாய்-தந்தையரும், 2 சகோதரர்களும், ஒரு சகோதரியும் உள்ளனர். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கொலையாளிகளைப் பிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை கடுமையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
இந்நிலையில், காவலர் சலீம் ஷா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை காலை பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்த பயங்கர ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.