கர்நாடக மாநிலம், சிக்கோடியில் ஜூலை 29-ஆம் தேதி நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார்.
அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மக்களவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள பாஜக, தேசிய அளவில் பிரசார வியூகத்தை அமைத்துள்ளது. அடுத்த 2 மாதங்களில் 50 கூட்டங்களில் பிரதமர் மோடியை பேச வைக்கத் திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் அக்கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. அப்போது 150 மக்களவைத் தொகுதிகளில் பிரசாரம் செய்யப்படுகிறது.
கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதால், பிரதமர் மோடியின் பிரசாரத்தை கர்நாடகத்தில் தீவிரப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இதன் முதல்முயற்சியாக, வட கர்நாடகத்தின் சிக்கோடியில் ஜூலை 29-ஆம் தேதி விவசாயிகள் மாநாட்டை பாஜக நடத்துகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதில் ஒரு லட்சம் விவசாயிகள் கலந்து கொள்கிறார்கள் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் விவசாயிகளைக் குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்ட மத்தியில் ஆளும் பாஜக, அண்மையில் விளைப்பொருள்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தியிருந்தது.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நீர்வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கர்நாடகத்துக்கு அடிக்கடி வரவிருக்கிறார்கள்.
இதனிடையே, ஜூலை 28-ஆம் தேதி பெங்களூருக்கு வர பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா திட்டமிட்டிருந்தார். இந்தப் பயணம் ஆக.10-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.