"பிரதமர் பதவி மட்டும்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு குறிக்கோள்; அவருக்கு ஏழைகள், விவசாயிகள் குறித்து எந்த கவலையும் கிடையாது'' என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஷாஜஹான்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான காரணங்களை எதிர்க்கட்சிகளிடம் கேட்டோம்.
அதற்கு விடை அளிப்பதில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்தன. ஆனால், இறுதியில் தேவையில்லாத அரவணைப்பை கொடுத்தன (மக்களவையில் தம்மை ராகுல் காந்தி கட்டி அரவணைத்ததை குறிப்பிட்டார்).
பாஜகவுக்கு எதிராக ஒரு கட்சி மட்டுமில்லை, பல்வேறு கட்சிகள் கை கோர்த்துள்ளன. இதுபோல் பல கட்சிகள் ஒன்றுடன் ஒன்று கூட்டாக இணைவது குழப்பத்தைத்தான் தரும். அது தாமரை (பாஜக சின்னம்) மலருவதற்கு உதவியாகவே இருக்கும்.
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது நடந்த சம்பவங்களைக் கண்டு மக்கள் திருப்தியடைந்துள்ளார்களா? யார் மீது தவறு இருக்கிறது என்பது மக்களுக்கு தெரிகிறதா? எதிர்க்கட்சியினர் ஏழைகளையும், நாட்டையும் பார்க்கவில்லை. அவர்களின் பார்வை அனைத்தும், பிரதமர் இருக்கை மீதே இருக்கிறது.
நான் ஏதேனும் தவறு செய்துள்ளேனா? நாட்டுக்காகவும், ஏழைகளுக்காகவும் நான் பணியாற்றி வருகிறேன். ஊழலுக்கு எதிராக போராடுகிறேன். இது ஒன்றுதான் எனது குற்றமாகும்.
முந்தைய அரசுகள் விவசாயிகளுக்காக எந்த உதவிகளையும் செய்ய விரும்பவில்லை. ஆனால், எனது அரசோ விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. எனது அரசுதான், நாட்டிலேயே முதன்முறையாக கரும்பு சாறில் இருந்து எத்தனாலை எடுப்பதற்கு அனுமதியளித்துள்ளது என்றார் மோடி. பிறகு, விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்மீது விவாதமும், வாக்கெடுப்பும் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
அப்போது ராகுல் காந்தி திடீரென எழுந்து சென்று, இருக்கையில் அமர்ந்திருந்த பிரதமர் நரேந்திர மோடியை கட்டி அரவணைத்தார்.
பின்னர் இருக்கைக்கு சென்று அமர்ந்த ராகுல் காந்தி, தனது கண்களை சிமிட்டி சமிஞ்ஞையும் செய்தார்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவிட்டு, பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டி அரவணைத்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.