பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெய் பிரகாஷ் சிங், கட்சியில் இருந்து சனிக்கிழமை நீக்கப்பட்டார்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை விமர்சித்துப் பேசியதற்காக, கட்சியின் தலைவர் மாயாவதி இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியை கப்பார் சிங் என்று ஜெய் பிரகாஷ் சிங் விமர்சித்திருந்தார். அதைத் தொடர்ந்து, "ராகுல் காந்தியால் நாட்டின் பிரதமராக முடியாது; ஏனெனில், அவருடைய தாயார் இந்திய வம்சாவளி இல்லை; பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் மாயாவதி மட்டுமே' என்றும் ஜெய் பிரகாஷ் சிங் கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்ததற்காக, அவரிடம் இருந்து கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. இந்நிலையில், கட்சியில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு மாயாவதி விரும்புகிறார். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் மட்டும் மாயாவதி கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது.
இந்நிலையில், தேர்தல் கூட்டணி தொடர்பாக வெளிப்படையாகக் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் நிர்வாகிகளுக்கு மாயாவதி கட்டுப்பாடு விதித்துள்ளார். எந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து கட்சித் தலைமை மட்டுமே முடிவு செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.