ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் முறைகேடு தொடர்பாக, அந்த மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா நேரில் ஆஜராக வேண்டுமென கீழமை நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக, அந்த மாநிலத்தைச் சேர்ந்த 2 கிரிக்கெட் வீரர்கள் அளித்த புகாரையடுத்து, இந்த விவகாரத்தை மத்திய புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டுமென, அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கிரிக்கெட் சங்கத்தின் அப்போதைய தலைவர் ஃபரூக் அப்துல்லா, பொதுச்செயலர் சலீம் கான், பொருளாளர் ஆஷன் அஹமது மிர்ஸா, ஜம்மு-காஷ்மீர் வங்கி நிர்வாகி அஹமது மிஸ்கர் ஆகியோர் மீது சங்க முறைகேடுகள் மற்றும் நிதியைத் தவறாகப் பயன்படுத்துதல் தொடர்பாக, புலனாய்வுத்துறை கடந்த 16-ஆம் தேதியன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
எனவே, வரும் ஆகஸ்டு 29-ஆம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்த அப்துல்லா, நேரில் ஆஜராகும் உத்தரவிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நேரில் ஆஜராகும் உத்தரவிலிருந்து அப்துல்லாவிற்கு விலக்கு அளிக்க முடியாது என்றும், அவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை, அவர் நேரில் ஆஜராகும் அன்று நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.