ஆப்பிரிக்க நாடுகளுக்கான அரசு முறை பயணத்தின் முதற்கட்டமாக பிரதமர் மோடி இந்தியாவில் இருந்து ருவாண்டாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டார்.
பிரதமர் மோடி ருவாண்டா, உகாண்டா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்கிறார். இதன் முதற்கட்டமாக அவர் திங்கள்கிழமை பிற்பகல் ருவாண்டாவுக்கு புறப்பட்டார்.
ருவாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற தனித்துவத்தை இந்தப் பயணம் மூலம் மோடி அடைகிறார். இதையடுத்து, உகாண்டாவுக்கு ஜூலை 24-ஆம் தேதி மோடி செல்கிறார். கடந்த 21 ஆண்டுகளில் உகாண்டாவுக்கு செல்லும் முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார். உகாண்டா நாடாளுமன்றத்திலும் மோடி உரையாற்றுகிறார்.
இதைத்தொடர்ந்து, 10-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ஜூலை 25-ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா சென்றடைகிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஷி ஜின்பிங்கையும் மோடி சந்திக்கிறார்.