சிறந்த நிர்வாகம் உள்ள மாநிலங்களில் கேரளம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றின் தகவல் தெரிவிக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த பொது விவகாரங்கள் மையம் (பிஏசி) என்ற அமைப்பு, சமூக-பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் மாநில அரசுகளின் செயல்பாடுகளை கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்து தரமதிப்பீட்டுடன் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், 2018-ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை, பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த அமைப்பு வெளியிட்டது. அதில், கேரள மாநிலம் மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தெலங்கானா, கர்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் முறையே மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளன.
மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், பிகார் ஆகிய மாநிலங்களில் அரசின் நிர்வாக செயல்பாடுகள் மோசமான நிலையில் உள்ளன.
2 கோடிக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட சிறிய மாநிலங்களில், நிர்வாக செயல்பாடுகளில் ஹிமாசலப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து, கோவா, மிúஸாரம், சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்துள்ளன. நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயம் ஆகிய மாநிலங்களில் நிர்வாக செயல்பாடுகள் மோசமான நிலையில் உள்ளன.
தனியார் அமைப்புகள் தரும் தகவல்கள் ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால், அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கேரளம், ஹிமாசலப் பிரதேசம், மிúஸாரம் ஆகிய மாநிலங்களில் அனைத்து வயது குழந்தைகளும் வாழ்வதற்கான சூழல் நன்றாக உள்ளது என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் தலைவர் சாந்தா சின்ஹா கூறுகையில், "சிறார்கள் வறுமையின் பிடியில் வாழ்வதற்கு அவர்களின் சூழ்நிலையைக் குறைகூற முடியாது; அவர்கள் நல்ல சூழலில் வளர்வதற்கான வாய்ப்புகளை அளிக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது' என்றார்.