சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி ஊக்கத் தொகையை மத்திய அரசு உயர்த்த உள்ளது. அதன்படி, தற்போது அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் தொகையைக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதலாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை தீவிரமாக மேற்கொள்ளவும் மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
9 மற்றும் 10-ஆம் வகுப்பு பயிலும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு "பேகம் ஹஸ்ரத் மஹல்' திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. அதேபோன்று 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு தலா ரூ.6,000 அளிக்கப்படுகிறது.
இந்தத் தொகையை சற்று உயர்த்தி வழங்க மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மெüலானா ஆசாத் கல்வி அமைப்பு (எம்ஏஇஎஃப்) முடிவு செய்துள்ளது. கடந்த 2017-18-ஆம் ஆண்டில் மொத்தம் 1.15 லட்சம் மாணவிகளுக்கு ரூ.78 கோடி கல்வி உதவித் தொகையை அந்த அமைப்பு வழங்கியது. அதனை நிகழாண்டில் ரூ.90 கோடியாக உயர்த்தி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒவ்வொரு மாணவிக்கும் தலா 15 சதவீதம் வரை கல்வி உதவித் தொகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த எம்ஏஇஎஃப் அமைப்பின் செயலர் ரிஸ்வானுர் ரஹ்மான், "கல்வி உதவித் தொகை உயர்த்தப்பட்டது குறித்த தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் தீவிர பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன' என்றார்.