பிரான்ஸ் நாட்டுடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ரஃபேல் போர் விமானம் தொடர்பான ஒப்பந்தத்தில் நிச்சயம் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்டிருக்கும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கடி மாற்றி மாற்றி பேசுகிறார். முதலில் அவர், ஒப்பந்தம் தொடர்பான தகவலை வெளியிடத் தயார் என்றார். ஆனால், தற்போது, அதை வெளியிட இயலாது என்கிறார். அந்த ஒப்பந்தத்தில் ரகசியமில்லை என்று முதலில் தெரிவித்தார். தற்போது அது மிகப்பெரிய ரகசியம் என்று கூறுகிறார்.
ரஃபேல் போர் விமானத்தின் விலை குறித்து பிரதமரிடம் கேட்டால், அவர் நெளிகிறார். எனது கண்களை பார்த்து பேசவே தயக்கப்படுகிறார். இதிலிருந்து அந்த ஒப்பந்தத்தில் நிச்சயம் ஊழல் நடந்திருப்பது தெரிகிறது என்று அந்தப் பதிவுகளில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசியபோது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபரை தாம் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது அவர் அந்த ஒப்பந்தம் குறித்த தகவலை வெளியிடத் தயார் என கூறியதாகவும் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசால் உடனடியாக அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில், இந்தியாவுடன் கடந்த 2008ஆம் ஆண்டில் பிரான்ஸ் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தில், பாதுகாப்பு தளவாடங்களின் செயல்பாட்டு திறன்கள் குறித்த தகவலை இரு நாடுகளும் ரகசியமாக வைத்திருப்பது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், ரஃபேல் போர் விமானம் விலை குறித்த தகவலை இந்திய அரசு வெளியிடுவதற்கு அந்த ஒப்பந்த ஷரத்துகளில் கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட்டிருக்கிறதா? என்று பிரான்ஸ் அறிவிக்கையில் தெரிவிக்கப்படவில்லை.