பனாஜி: கோவா மாநில பத்தாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு, ஹிந்துத்துவ செயல்பாட்டாளரான விநாயக் சாவர்க்கரின் படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவா மாநில பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடப் பிரிவில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடங்களுக்கு என 'இந்தியாவும் சமகால உலகமும்' என்றொரு பாடப் புத்தகம் உள்ளது. இந்த புத்தகத்தில்தான் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு ஹிந்துத்துவ செயல்பாட்டாளரான விநாயக் சாவர்க்கரின் படம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் அவரைப் பற்றிய குறிப்பும் இடம்பெற்றுள்ளது. இந்த விஷயம் தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய தேசிய மாணவர் கூட்டமைப்பு என்னும் அமைப்பின் தலைவரான அஹ்ரஸ் முல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பத்தாம் வகுப்பு வரலாற்றுப் பாடப்புத்தகங்களில் முன்னாள் பிரதமர் நேருவின் படம் நீக்கப்பட்டு ஹிந்துத்துவ செயல்பாட்டாளரான விநாயக் சாவர்க்கரின் படம் இடம் பெற்றுள்ளது மிகுந்த வருத்தமாக உள்ளது. நாளையே பாஜக மஹாத்மா காந்தியின் படத்தினை நீக்கி விட்டு, காங்கிரஸ் என்ன செய்துள்ளது என்று கூட கேள்வி எழுப்பும். நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றுள்ள வரலாற்றினையும், இந்திய சுதந்திரத்திற்கான காங்கிரசின் பங்களிப்பையும் இவர்கள் மாற்றியமைக்க நாம் விடக் கூடாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.