பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்த எந்த வேட்பாளராக இருந்தாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்கிழமை இரவு பெண் செய்தியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது, வர இருக்கும் மக்களவை பொதுத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அல்லது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியில் யாரேனும் ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த ஆட்சேபம் உள்ளதா என்று ஒரு பெண் செய்தியாளர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி,
"பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ வீழ்த்தும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நான் ஆதரவளிப்பேன். எங்களுடைய முக்கிய குறிக்கோளே உத்தரப் பிரதேசத்திலும் ,பிகாரிலும் வெற்றி பெறுவது. மக்களவை மொத்த தொகுதியில் இந்த 2 மாநிலங்கள் 22 சதவீதத்தை கவர்ந்துவிடுகிறது.
இந்த 2 மாநிலங்களிலும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி அமைக்க தயாராக உள்ளது.
சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுக்கும் பாஜக-வுக்கும் இடையே ஏற்பட்டுள்ள சச்சரவு காங்கிரஸுக்கு கூடுதல் அனுகூலமாக அமைந்துள்ளது" என்றார்.