பயங்கரவாதம், பாலியல் வன்முறைகள் போன்ற குற்றச் சம்பவங்கள் நாட்டில் அதிகரிப்பதற்கு காரணம், இஸ்லாமிய மக்கள் தொகையின் அதிகரிப்பே என்று பாஜக எம்.பி., ஹரி ஓம் பாண்டே கருத்து தெரிவித்துள்ளார்.
2014-இல் உத்தரப் பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக பாஜகவின் ஹரி ஓம் பாண்டே தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் வெள்ளிக்கிழமை ஃபைசாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
"பயங்கரவாதம், பாலியல் துன்புறுத்தல், பாலியல் தொந்தரவு போன்ற குற்றச் செயல்கள் தேசத்தின் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதற்கு இஸ்லாமிய மக்கள் தொகையின் அதிகரிப்பே காரணம். கூர்மையாக கவனித்தால் தெரியும், சுதந்திரம் பெற்றதில் இருந்து இஸ்லாமிய மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவது.
இது இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும், கடைசியில் அரசின்மை நிலைக்கு தள்ளப்படும்.
பயங்கரமான பிரிவினையில் இருந்து இந்தியாவை பாதுகாக்க, மக்கள் தொகையை தடுப்பதற்கு நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய வேண்டும்" என்றார்.
ஆனால், அது ஹரி ஓம் பாண்டேவுடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கும் என்று கட்சி சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், "அவர் கூறிய கருத்தை கட்சி ஏற்கவில்லை. அது அவருடைய தனிப்பட்ட பார்வையாக இருக்கும், கட்சியின் உணர்வு அல்ல. இதுபோன்ற சர்ச்சைக் கருத்துகளை தெரிவிப்பதில் இருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும்" என்றார்.
இதற்கு முன் பாலிய்யா மாவட்டம், பைரியா தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர சிங் கூறுகையில், "நமது தேசத்தை வலுவானதாக உருவாக்க இந்து தம்பதிகள் குறைந்தபட்சம் 5 குழந்தைகளையாவது பெற்றெடுக்க வேண்டும்" என்று கூறியது குறிப்பிடத்தக்கது.