இளம் வயதிலேயே இமயத்தின் சிகரம் தொட்ட இந்தியப் பெண் தற்போது ஆப்பிரிக்காவின் உயரிய கிளிமான்ஜாரோ சிகரம் தொட்டு சாதனைப் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அடுத்தகட்ட சாதனைக்கும் தயாராகி வருகிறார்.
இந்தியாவின் ஹரியாணா மாநிலத்தில் உள்ள ஹிஸர் நகரத்தைச் சேர்ந்தவர் ஷிவாங்கி பதக் (வயது 17). இவர் சமீபத்தில் இமயமலைச் சிகரம் தொட்ட இளம் இந்தியப் பெண் எனும் சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில், ஆப்பிரிக்காவில் உள்ள மிக உயரிய கிளிமான்ஜாரோ சிகரத்தைத் தொட்டு தனது சாதனை மகுடத்தில் மேலும் ஒரு மரகதத்தை இணைத்துக்கொண்டார். சுமார் 3 நாட்களில் கிளிமான்ஜாரோ சிகரத்தை அடைந்ததன் மூலம், புதிய சாதனையைப் படைத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் ஷிவாங்கி பதக், இதுகுறித்து கூறுகையில்,
நான் எப்போதுமே ஏதாவது புதியதாகச் செய்து மற்றவரிடத்தில் இருந்து என்னை வேறுபடுத்திக்காட்ட விரும்புகிறேன். அருணிமா சின்ஹா என்பவர் மலை ஏறுவதைக் கண்டு அதுகுறித்து தகவல்களைத் தேடத் துவங்கினேன். அதுவே எனக்கு ஊக்கமாக மாறி இதைச் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
அனைத்து பெண் குழந்தைகளும் எந்த ஒரு சாதனைப் படைப்பதாக இருந்தாலும் அவர்களது பெற்றோரின் ஒப்புதலைப் பெற வேண்டியதாக உள்ளது. அவ்வகையில், எனது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எனது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து வந்துள்ளனர். இதுபோன்று அனைத்து பெற்றோர்களும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்க வேண்டும். பெண்களால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றார்.
இதையடுத்து, ஐரோப்பாவில் உள்ள உயரிய சிகரத்தை எட்டுவது தான் தனது அடுத்த இலக்கு என்று ஷிவாங்கி பதக் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்று உலகம் முழுவதும் உள்ள உயரிய சிகரங்களை எட்ட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.