லக்னௌ: யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக, அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பலவேறு மாநிலங்களில் 13 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களின் முடிவுகள், வியாழனன்று வெளியானது. இதில் உத்தரப்பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி மற்றும் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பாஜக படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அரசின் ஊழல்களினால்தான் சமீபத்திய இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி கண்டதாக, அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாநிலத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் அமைந்துள்ள கோபமு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் ஷ்யாம் பிரகாஷ். அவர் இந்த தோல்வி பற்றிக் கூறியதாவது:
இந்த அரசின் நடவடிக்கைகள் குறித்து விவசாயிகள் அதிருப்தியுடன் இருக்கின்றனர். அத்துடன் வேறு சில காரணங்களும் உள்ளன. அரசு மீது எந்த தவறும் இல்லை. அதிகாரிகள்தான் தவறுக்கு காரணம்.
கடந்த அரசை விட இந்த அரசில் ஊழல்கள் அதிகமாக உள்ளது. இதுவே எனதுஅதிருப்திக்கு காரணம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல பலியா மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியா சட்டப்பேரவைத் தொகுதி பாஜக எம்.எல்.ஏவாக இருப்பவர் சுரேந்திரா சிங். அவர் இந்த தோல்வி பற்றிக் கூறியதாவது:
குறிப்பிட்ட இரு தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தான் பிரசாரம் செய்தார். எனவே முதல்வர் தனது தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.
ஒட்டு மொத்த அரசும் ஊழலில் ஈடுபட்டுள்ளது. மக்களுக்கு எந்த விதமான நலத்திட்டங்களின் பலனும் கிடைப்பதில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சிக்கு எதிராக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் இருவரே போர்க்கொடி தூக்கியுள்ள விவகாரம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.