கொல்கத்தா: நான் என்ன பேச வேண்டுமோ அதனை ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பேசுவேன் என்று நாகபுரி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விளக்கமளித்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாகபுரியில் வரும் 7-ந் தேதி நடக்க உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பயிற்சி முகாம் நிறைவு விழாவில், காங்கிரசினைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேச உள்ளார்.
இதுகுறித்த தகவல்கள் வெளியானவுடனே பல்வேறு விதமான எதிர்வினைகள் வெளியாகத் துவங்கின. சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாரதீய ஜனதா கட்சியும் வெறுப்புணர்வு கொள்கையை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.
இந்த நேரத்தில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவது, காங்கிரசில் பலத்த சலசலப்பையம், சங்கடமான சூழலையும் ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கூட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிரணாப் முகர்ஜிக்கு கடிதங்களை எழுதியுள்ளனர் .
இந்நிலையில் நான் என்ன பேச வேண்டுமோ அதனை ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பேசுவேன் என்று நாகபுரி ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விளக்கமளித்துள்ளார்.
பெங்காலி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளதாவது:
ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதங்கள் வருகின்றன. நான் என்ன பேச வேண்டுமோ அதனை ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் பேசுவேன் எனக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடிதங்கள் வந்துள்ளது, தொலைபேசி அழைப்புகளும் வந்துள்ளது, ஆனால் அவைகளுக்கு இதுவரையில் நான் பதிலளிக்கவில்லை,
இவ்வாறு பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.