ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் ரூ.3,500 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்க இயக்குநரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அமலாக்க இயக்குநரகம், அதுதொடர்பாக விசாரித்து வருகிறது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடமும் அமலாக்க இயக்குநரகம் விசாரணை நடத்தியுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ய தடை விதிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிதம்பரம் கடந்த வாரம் முறையிட்டிருந்தார். அதனை ஏற்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி, ஜூன் 5-ஆம் தேதி வரை சிதம்பரத்துக்கு எதிராக கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்க அமலாக்க இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், விசாரணைக்காக செவ்வாய்க்கிழமை (ஜூன் 5) ஆஜராக சிதம்பரத்துக்கு அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
இந்நிலையில், சிதம்பரம் கோரியிருந்த முன் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் விசாரணையை ஜூலை 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. மேலும், சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடை ஜூலை 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஏர்செல்-மேக்சிஸ் பண மோசடி வழக்கு உள்பட, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள்ளாக முடிக்குமாறு சிபிஐ மற்றும் அமலாக்க இயக்குநரகத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 12-ஆம் தேதி அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமலாக்க இயக்குநரகம் அழைப்பாணை ஏற்று சிதம்பரம் இன்று விசாரணைக்கு ஆஜராகுவார் என்று தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.