இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே தலைமையில் பிரிவினைவாத இயக்கம் முன்பு செயல்பட்டு வந்தது.
பிந்தரன்வாலே தலைமையிலான இந்த பிரிவினைவாதிகள் சீக்கியர்களின் புனிதத்தலமான பொற்கோயிலில் பதுங்கியிருந்தனர். 1984-ஆம் ஆண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி, "ஆபரேஷன் புளூஸ்டார்' நடவடிக்கை மூலம் ராணுவத்தை பொற்கோயிலுக்குள் அனுப்பி அங்கு பதுங்கியிருந்த பிரிவினைவாதிகளை வேட்டையாடினார். இந்த நடவடிக்கை காரணமாகவே பின்னர் இந்திரா காந்தி, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொற்கோயிலில் ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதன் 34-ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், பொற்கோயில் வளாகத்தில் அனைத்து இந்திய சீக்கிய மாணவர்கள் கூட்டமைப்பினர் கைகளில் வாள், பலகைகள் போன்றவற்றை உயர்த்திப் பிடித்து காலிஸ்தான் தனிநாட்டுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். இதனால், அப்பகுதியில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே, பஞ்சாப் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொற்கோயில் பகுதியில் ஏராளமான போலீஸார் மற்றும் ராணுவ படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.