ஈராக்கில் கொல்லப்பட்ட 40 பேரை பாதுகாக்க தவறிய மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தெளிவான விசாரணை வேண்டும் என்று தொடர்ந்த பொதுநல வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
ஈராக்கின் மொசூல் நகரை கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைப்பற்றினர். இந்தியாவின் பஞ்சாப், இமாச்சல பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து மருத்துவமனை கட்டுமான பணிக்காக சென்றிருந்த 40 இந்தியர்களும் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர்.
இவர்களின் கதி என்ன ஆனது என்பது உடனடியாக தெரிய வரவில்லை. அப்போதே, இறந்து விட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு நிராகரித்து விட்டது. 40 பேரில் ஒருவர் மட்டும் இறந்துவிட்டதாக முன்னதாக தகவல்கள் வந்தன.
பின்னர், 2017-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் கடத்தப்பட்ட 39 பேரின் கதி என்ன என்று கேள்வி எழுப்பியபோது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் போதிய ஆதாரம் இல்லாமல் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறுவது பாவத்துக்குரிய செயலாகும் என்று கூறினார்.
இதையடுத்து கடந்த மாதம், ஈராக்கில் கடத்தப்பட்ட 39 பேரும் உயிரிழந்துவிட்டதாக சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்தில் 39 பேரின் உயிர்களை பாதுகாக்க தவறிய மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தெளிவான விசாரணை நடத்த வேண்டும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்த வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.