ஆஸ்துமா நோய்க்கு பாரம்பரிய முறையில் மீன் மருந்து அளிக்கும் பணி ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கியது.
ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் கடந்த 173 ஆண்டுகளாக மக்களுக்கு மீன் மருந்து அளிப்பதை பல தலைமுறைகளாக இலவசமாக செய்து வருகின்றனர்.
இதற்கு தெலுங்கானா அரசும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.
இந்த மீன் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்காக ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து மட்டுமல்லாமல் கர்நாடகம், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, கேரளம், உத்தரப் பிரதேசம், தில்லி ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
அதன்படி வெள்ளிக்கிழமை காலை ஹைதராபாதின் நாம்பள்ளி பகுதியில் உள்ள பொருட்காட்சித் திடலில் மீன் மருந்து அளிக்கும் பணி தொடங்கியது. அதற்காக 1.60 லட்சம் மீன்கள் மற்றும் அதன் வாயில் வைக்கும் மருந்துகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் ஹைதராபாத்தில் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இந்த மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தெலங்கானா அரசு 133 சிறப்புப் பேருந்துகளை இயக்கியது.
மருந்து உட்கொள்ளக் காத்திருப்பவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்காக ரூ.5 விலையில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை சமூக ஆர்வலர்கள் வழங்கினர். மீன் மருந்து அளிக்கும் பணி சனிக்கிழமை காலையுடன் நிறைவு பெற உள்ளது.