திருப்பதியில் நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி கொர்லகுண்டா பகுதியில் வசித்து வரும் சுப்ரமணியம், வனஜாகுமாரி தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சுப்ரமணியம் இறந்த பின் அவரது மூத்த மகன் தேவஸ்தானத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இளைய மகன் பாலாஜி(20) இண்டர்மீடியட் எனப்படும் பிளஸ் 2 வகுப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து, மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் நுழைவுத் தேர்வை எழுதினார்.
ஆனால், தொடர் தோல்வியையே சந்தித்தார். இதன் மன வருத்தமடைந்த அவர் வியாழக்கிழமை இரவு தன் அறையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பதி போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.