புதுதில்லி: ஏர்செல்-மேக்சிஸ் கருப்புப் பண முறைகேடு வழக்கில், செவ்வாயன்று அமலாக்கத்துறை முன்பாக இரண்டாம் முறையாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரணைக்கு ஆஜரானார்.
முன்னதாக, இந்த வழக்கு விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு சிதம்பரத்துக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 5-ஆம் தேதி சம்மன் அனுப்பினர். அதன்படி மறுநாள் ஆஜரான அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு அவர் அளித்த பதில்களை பதிவு செய்து கொண்டதாகத் தெரிகிறது. ரூ.3,500 கோடி ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் ஏற்கெனவே அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
ரூ.600 கோடி வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க முடியும். ஆனால், ரூ.3,500 கோடி மதிப்புடைய மேக்சிஸ் முதலீட்டை, அந்த வாரியத்தின் மூலம் சிதம்பரம் அனுமதிக்கவைத்தார்; இதில் பெரிய அளவில் முறைகேடு உள்ளது என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. அதனடிப்படையில், கருப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.