அரசு பங்களாவை காலி செய்த போது, அதில் இருந்த முக்கிய வசதிகள், பல்புகளைக் கூட விட்டு வைக்காமல் கழற்றிச் சென்றதாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, அரசு பங்களாவில் பொறுத்தியிருந்த துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டைல்ஸ்கள் கூட காணாமல் போயிருந்ததாக அதிகாரிகள் கூறியிருந்தனர்.
அகிலேஷ் யாதவ் காலி செய்த பங்களாவை நேரில் ஆய்வு செய்த அதிகாரிகள், காணாமல் போன பொருட்கள் பற்றிய அறிக்கையை இன்னும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தாக்கல் செய்ய உள்ளனர். இது பற்றி சட்ட ஆலோசனை பெற்று, நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அகிலேஷ் யாதவைப் போல, உத்தரப்பிரதேசத்தின் மற்ற முன்னாள் முதல்வர்கள் காலி செய்த பங்களா பற்றிய கேள்வி எழுந்தது.
ஆனால், வேறு எந்த பங்களாவும் இந்த அளவுக்கு சேதப்படுத்தப்படவில்லை என்றும், எந்த பொருளும் காணாமல் போனதாக தகவல் இல்லை என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இது பற்றி விளக்கம் அளித்த அகிலேஷ், இந்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றும், வேண்டுமென்றே பாஜக குறை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.