புதுதில்லி: ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார்.
இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரு நிறுவனங்களின் ரூ.1.16 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை கடந்த ஆண்டு செப்டம்பரில் முடக்கியது.
இந்நிலையில் ஏர்செல் மேக்சிஸ் பண மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, அமலாக்கத் துறை தில்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
முன்னதாக இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாயன்று கூறியதாவது:
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் புதிய குற்றப்பத்திரிகை புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதில், கார்த்தி சிதம்பரம் மற்றும் சிலரின் பெயர்களும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்தியிடம் ஏற்கெனவே நடத்திய விசாரணையின்போது, அவர் கூறிய பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி தில்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான நீதிமன்றத்தில் புதனன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குற்றப்பத்திரிக்கையானது சுமார் 65 பக்கங்கள் கொண்டதாக இருந்தது. அத்துடன் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டப்பிரிவு 45-ன் கீழ் அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு இருந்தன. குற்றப்பத்திரிக்கை மீதான விவாதங்கள் வரும் ஜுலை 4-ஆம் தேதியன்று நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுமென்று தெரிகிறது