தங்களது இறப்புக்குப் பிறகு மனநலம் குன்றிய தங்களது மகளின் நிலை என்னவாகும் என்று கவலை அடைந்த கமலஹாசன் (77), சரோஜினி (71) தம்பதியினர் எடுத்திருக்கும் முடிவானது ஏராளமானோருக்கு வழிகாட்டும் விதத்தில் அமைந்துள்ளது.
தங்களுக்கு சொந்தமான 3 கோடி மதிப்புள்ள இரண்டு அடுக்குமாடிகளைக் கொண்ட வீட்டை கேரள அரசுக்குக் கொடுத்துள்ள கமலஹாசன், அந்த வீட்டை மனநலம் பாதித்த பெண்களின் நல்வாழ்வுக்காக பயன்படுத்துமாறும், அதில், தனது மகளையும் வைத்து பராமரிக்குமாறும் வேண்டிக் கொண்டார்.
இவரது விருப்பத்தை நிறைவேற்றிய கேரள சமூக நலத் துறை, அந்த குடியிருப்பை 50 பெண்கள் தங்கும் அளவுக்கு மாற்றி, அதற்கு கமலஹாசனின் மகள் பிரியா பெயரில் பிரியா இல்லம் என்று வைக்கவும் முடிவு செய்துள்ளது.
அதோடு, கமலஹாசனின் மேலும் சில வீடுகளையும், இடங்களையும் கேரள அரசுக்குக் கொடுத்து, மனநலம் குன்றியவர்களுக்கான இல்லத்தை பராமரிக்கும் செலவுக்கு இந்த சொத்துக்களைப் பயன்படுத்துமாறும் கூறியுள்ளார்.
தங்களுக்குப் பிறகு, தங்களது மகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கவலை தற்போது தீர்ந்துவிட்டதாகவும், தங்களது குடும்பத்தில் இதுபோல மனநலம் பாதித்த பிள்ளைகளை, அவர்களது சொத்துக்காக உறவினர்களே கொலை செய்துவிட்டு சொத்துக்களை அபகரித்துக் கொண்ட சம்பவங்களைப் பார்த்துதான் இந்த முடிவுக்கு வந்தாகவும் அந்த தம்பதி கூறுகிறார்கள்.
இவர்களது முடிவால், தங்களது மகளுக்கு மட்டுமல்லாமல், இதுபோன்ற ஏராளமான பெண்களுக்கும் நல்வழியை ஏற்படுத்தியுள்ளனர் இந்த தம்பதி.