தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தமிழகத்தில் நெல்லை, கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர். அஸ்ஸாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் சுமார் 6000 பேர் 180 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
மணிப்பூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வரும் நிலையில், அப்பணிகளை கண்காணிக்கும் செயலர் திலீப் சிங் ஐஏஎஸ், வெள்ளத்தில் இறங்கி மீட்புப் பணிகளை செய்து வருகிறார்.
நம்ம ஊரில் இப்படியெல்லாம் எப்போதாவதுதான் பார்க்க முடியும்.