ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பழைய பேப்பா் கடை ஒன்றில் 2,000 ஆதார் அட்டைகள் கொண்ட மூட்டை ஒன்று கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
மூட்டையில் செய்தித்தாள்களுடன் 2,000 ஆதார் அட்டைகளை அடைத்து வைத்து பழைய பேப்பா் கடையில் சிலா் விற்பனை செய்துள்ளனா்.
அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது அதில் ஆதார் அட்டைகளின் குவியல் இருந்தது தெரியவந்ததும் வியாபாரி அதிர்ச்சி அடைந்து காவல் துறை தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு தகவல் அளித்தார்.
இந்த ஆதார் அட்டைகள் அனைத்தும் அஞ்சல் மூலம் பயனாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியவை ஆகும்.
அஞ்சலகத்திலிருந்து இந்த மூட்டை தவறியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அஞ்சல் துறை அதிகாரிகளிடம் இதுதொடா்பாக தெரியப்படுத்தி உள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனா்.