கடன் சுமையில் தத்தளித்து வரும் ஏர்செல் செல்லிடப்பேசி நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான ஏர்செல் செல்லுலார், டிஷ்நெட் வயர்லெஸ் ஆகியவை நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக, தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை கூறியதாவது:
புதிய செல்லிடப்பேசி நிறுவனத்தின் வரவு, புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஆகியவற்றால் ஏர்செல் நிறுவனம் கடுமையான போட்டியைச் சந்தித்துள்ளது. கடன் சுமை அதிகரிப்பு, நஷ்டம் அதிகரிப்பு இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததால் ஏர்செல் நிறுவனத்தின் வர்த்தகம் முடங்கியது.
அந்த நிறுவனம், தங்கள் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி, தேசிய கம்பெனி சட்டத் தீர்ப்பாயத்தில் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்தது. இதனிடையே, இந்த நிறுவனம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஏர்செல் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்துமாறு தீவிர மோசடி புலனாய்வு அமைப்புக்கு மத்திய பெருநிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து, ஏர்செல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிரான விசாரணையை தீவிர மோசடி புலனாய்வு அமைப்பு தொடங்கியுள்ளது என்றார் அவர்.
ஏர்செல் நிறுவனம், ஏற்கெனவே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்தில் உள்ளது. விதிமுறைகளை மீறி அந்த நிறுவனம், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் அனுமதியைப் பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.